தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்ய ராஜபக்சேவை மோடி வலியுறுத்தினார்
தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
புதுடெல்லி
4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பை ராஜபகசே ஏற்றுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்சேவை வரவேற்றார். இதைதொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ராஜபக்சே சந்தித்து பேசினார். இதில் இருநாட்டு வெளியுறவுத்துறை விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் விவாதிக்கப்பட்டது.மக்கள் தொடர்பை அதிகரிக்கவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாங்கள் விவாதித்தோம்.
தீவிரவாதம் இந்த பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என கூறினார்.