சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு ; பியூஸ் கோயல் விமர்சனம்

சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2020-02-19 03:08 GMT
ஐதராபாத்,

மத்திய அரசின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

சிஏஏவுக்கு எதிராக கேரளா,உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதேபோல், தெலங்கானா சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற, சமீபத்தில் நடைபெற்ற அந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள தெலுங்கானா அரசின் முடிவை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பியூஸ் கோயல் கூறும் போது, “கூட்டாட்சி அமைப்பில், தேசியச் சட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். 

சிஏஏ சட்டத்தை மலிவான அரசியல் அல்லது ஒரு சாராரை மட்டும் திருப்திப்படுத்துவதன் அடிப்படையில் அரசியலாக்க வேண்டாம். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தை மலிவான அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் முடிவை தெலங்கானா அரசு திரும்பப்பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்