ராம்பூரில் இருந்து அசம்கான் எம்.பி., மனைவி, மகன் வேறு சிறைக்கு மாற்றம் அகிலேஷ் யாதவ் சந்தித்தார்

அசம்கான் எம்.பி., அவரது மனைவி, மகன் ராம்பூரில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2020-02-27 22:10 GMT
சீதாபூர், 

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.பி. அசம்கான். அவருடைய மனைவி தசீன் பாத்திமா, ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர்களுடைய மகன் அப்துல்லா அசம், கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் சுயர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அப்போது 25 வயது பூர்த்தி ஆகாத அவர், போலி பிறப்பு சான்றிதழ் சமர்ப்பித்ததாக பா.ஜனதா வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார். போலி சான்றிதழ் நிரூபணமாகி, அப்துல்லா அசமின் வெற்றி செல்லாது என்று கோர்ட்டு அறிவித்ததால், அவர் பதவி இழந்தார்.

அவருக்கு போலி பிறப்பு சான்றிதழ் பெற உடந்தையாக இருந்ததாக அசம்கான், அவருடைய மனைவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகியோர் நேற்று முன்தினம் ராம்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 2-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் ராம்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று 3 பேரும் சீதாபூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேசினார். பின்னர், நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “அசம்கானை பா.ஜனதா குறிவைப்பது அரசியல் சதி” என்று கூறினார்.

மேலும் செய்திகள்