கொரோனா வைரஸ்: கட்டுப்படுத்த மாநில அளவிலான பணிக்குழு - அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா வைரஸ் காரணமாக எழும் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் சமீபத்தில் டெல்லியில் நடந்த வன்முறைகள் காரணமாக பலர் உயிர் இழந்ததால் நான் இந்த ஆண்டு ஹோலியை கொண்டாடவில்லை. மக்கள் வேதனையில் உள்ளனர். அதனால் தான் தானும் எந்த அமைச்சரும் எம்.எல்.ஏ.வும் ஹோலி பண்டிகையை கொண்டாட மாட்டோம்.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக எழும் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல முகவர், துறைகள் மற்றும் நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.