கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்

கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-03-26 21:31 GMT
புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது போல, அது தொடர்பான பல வதந்திகளும் பரவி வருகின்றன. இவற்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது.

இந்த வதந்திகளில், ‘கொசுக்கள் மூலம் கொரோனா பரவுகிறது’ என்பது முக்கியமானது. ஆனால் கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது எனவும், வைரஸ் தொற்று கொண்ட ஒருவர் மூலம்தான் பரவும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக வைரஸ் தொற்று கொண்ட நபர் ஒருவருக்கு, அதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் அந்த நபர் மூலம் பரவும் என உறுதிபடுத்தி இருக்கிறது.

மேலும் பூண்டு மற்றும் மது போன்றவை மூலம் கொரோனாவை தடுக்கலாம் என கூறப்படும் வதந்தியை மறுத்துள்ள சுகாதார அமைச்சகம், இவற்றால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது என விவரித்து உள்ளது.

இதைப்போல எல்லாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் விளக்கம் அளித்து இருக்கிறது. குறிப்பாக காய்ச்சல், குளிர், இருமல் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள், சுகாதார பணியாளர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீதமுள்ளவர்கள் அணிய தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்