பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2020-03-29 09:43 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மராட்டியத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கடந்த 24ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  எனினும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது.  சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்களை பொதுமக்களில் சிலர் கடைப்பிடிப்பது இல்லை.  தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடுகிறது.  வைரஸ் பரவல் பற்றிய அச்சம் இல்லாத நிலை உள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேபோன்று, விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது.  இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்