கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு

கேரள அரசின் ஊரடங்கு தளர்வால் கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும் என மத்திய அரசு வேதனை தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-20 06:04 GMT
புதுடெல்லி,

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது.

இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.  அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை, மருந்து மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  எனினும், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 14ந்தேதி காலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்பொழுது, இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.  நாட்டில் நோய் தொற்று மிக வேகமுடன் பரவி வருகிறது.

இதனால் நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.  ஏப்ரல் 20ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும்.  பின்னர் தளர்வுகள் இருக்கும்.  ஏப்ரல் 20ந்தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும் என கூறினார்.

நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 543 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த சூழலில் கேரளாவில் உள்ளூர் தொழிற்கூடங்கள், சலூன் கடைகள், உணவு விடுதிகள், புத்தக நிலையங்கள், நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு, குறு தொழில்கள், நகரங்களில் குறைந்த தொலைவுக்கு பேருந்து போக்குவரத்து, இரு சக்கர வாகனங்களில் 2 பேர் மற்றும் 4 சக்கர வாகனங்களின் பின் இருக்கைகளில் 2 பேர் பயணிக்க அனுமதி ஆகியவற்றுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியானது.

கேரள அரசின் இந்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கை, கடந்த 15ந்தேதி பிறப்பித்த மத்திய அரசின் வழிகாட்டுதல் உத்தரவுகளை மீறுவது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்து போக செய்ய கூடியது என்று கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை 401 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.  நேற்று 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  13 பேர் குணமடைந்து திரும்பி சென்றுள்ளனர் என கேரள மாநில சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்