ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை

ஊரடங்கு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-05-11 00:00 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 1½ மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்புக்கு பிறகு அவர் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துவது இது 5-வது தடவை ஆகும். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மூலம் குக்கிராமங்களிலும் கொரோனா தொற்றும் பரவும் ஆபத்து இருப்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுதான் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே, கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் ஊரடங்கை 21-ந் தேதி வரை அந்த மாநில அரசு நீட்டித்து உள்ளது.

வருகிற 25-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஊரடங்கை மே 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு வங்காள இமாம்கள் சங்கத்தின் தலைவர் முகமது யாகியா கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசிடமும் இதே கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜியை கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்த விஷயத்தில் முஸ்லிம் தலைவர்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், மக்களின் உயிரை பாதுகாப்பது முக்கியம் என்றும் கூறி உள்ளார்.

எனவே மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்றும், அதன் அடிப்படையில் ஊரடங்கை விலக்கிக் கொள்வதா? அல்லது சில கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பதா? எந்தெந்த பகுதிகளில் நீட்டிப்பது? என்பது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்