அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு

அரியானாவில் லேசான அளவில் நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.

Update: 2020-06-24 11:32 GMT
சண்டிகர்,

அரியானாவின் ரோக்தக் நகர் அருகே இன்று மதியம் 12.58 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட காயம் அல்லது உயிரிழப்பு ஆகியவை பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  கடந்த சில நாட்களாக நாட்டின் வட பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.

மராட்டியத்தில் அகோலா நகரில் இருந்து தெற்கே 129 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.3 அளவில் பதிவானது.என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது.

இதேபோன்று, வடகிழக்கு பகுதிகளான மிசோரம் மற்றும் ஒடிசாவில் நேற்று முன்தினம் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடந்த 18ந்தேதி மற்றும் கடந்த ஞாயிறு அன்றும் மிசோரமில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

இதேபோன்று, சத்தீஷ்காரில் நேற்று முன்தினம் இரவு 7.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்