காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-07-05 11:09 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரே என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ரைபிள் படை பிரிவினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் நேற்று கூட்டாக இணைந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின்னர் தேடுதல் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டனர்.  இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர்.  இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்தது.  அவர்களின் உடல்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.  இந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை காஷ்மீர் போலீசார் இன்று உறுதி செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்