நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலுக்கும் ஸ்வப்னா சுரேசுக்கும் தொடர்பு?

நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலுக்கும், ஸ்வப்னா சுரேசுக்கும் உள்ள தொடர்பு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2020-07-07 16:39 GMT
திருவனந்தபுரம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது.  தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.  அவர் தப்பியோடி விட்டார்.  அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.

முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  ஸ்வப்னாவை சிவசங்கர்தான் பதவியில் நியமனம் செய்துள்ளார் என்றும் புகார் எழுந்தது.

ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்வப்னாவின் நியமனம் குறித்து தனக்கு தெரியாது என விளக்கமளித்துள்ளார்.  இந்த நிலையில், சிவசங்கரின் பதவி பறிபோனது.  தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சரித் என்பவரிடம் சுங்க துறை நடத்திய விசாரணையில், ஸ்வப்னாவுக்கு இதில் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.  ஸ்வப்னா எனது நண்பர் என சரித் கூறியுள்ளார்.

அமீரகத்தின் தூதரக ஆவணங்களை போலியாக ஸ்வப்னா தயாரித்து உள்ளார் என்றும் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரபல நடிகையான பூர்ணாவை கடந்த சில நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டியது.  அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் தங்க கடத்தலிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.  தங்க கடத்தலுக்காக மாடல் அழகிகள் மற்றும் நடிகைகளை அவர்கள் பயன்படுத்தியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்ந்து, பல சிக்கலான வழக்குகளில் கூட தங்களை வெளியே கொண்டு வர ஒரு தூதரக பெண் உதவியாக இருந்துள்ளார் என்றும், அந்த பெண் ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கும்பல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி போலீசார் சுங்க துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதன்படியே, தங்க  கடத்தல் தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்