கொரோனா தடுப்பூசி பணி ஐதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது

கொரோனா தடுப்பூசி பணி நேற்று ஐதராபாத் நிஜாம்அரசு மருத்துவமனையில் தொடங்கியது. முதல்கட்ட டோச் வழங்கப்பட்டது.

Update: 2020-07-08 09:33 GMT
ஐதராபாத்

ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி நேற்று ஐதராபாத் நிஜாம்அரசு மருத்துவமனையில் தொடங்கியது.

இதுகுறித்து நிஜாம் அரசு மருத்துவமனை இயக்குநர் மனோகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் அறிவுறையின்படி முதலில் இந்த மருந்துமீது நம்பிக்கை உள்ள நபர்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு, அதில் கோவேக்ஸின் தடுப்பு மருந்து செலுத்தி சோதனை செய்யப்படும். இதனை தொடர்ந்துஅதே ரத்தத்தில் மேலும் சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு அதன்பின்னர் முதல் டோஸ் வழங்கப்படும். 

இதுபோன்று 3 டோஸ்கள் செலுத்தப்பட்ட பின்னர்பரிசோதனை நிறைவு பெறும். முதல் முறை தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின்னர் அந்த நபர் 2 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். அதன் பின்னர் 14 நாட்கள்கழித்து 2-வது டோஸ் செலுத்தப்படும். பின்னர் 2 நாட்கள் அந்தநபர் கண்காணிக்கப்பட்டு அதன்பின்னர் 3-வது டோஸ் வழங்கப்படும். இறுதியாக மீண்டும் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்