கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,534 ஆக உயர்வு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 7.67 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதுபற்றி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 117 பேர் வெளிநாட்டினர். 74 பேர் பிற மாநிலத்தவர். 133 பேர் உள்ளூர் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார்.
இதனால் கேரளாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 534 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,795 ஆக உள்ளது.