சோனியா காந்தி மக்களவை எம்.பி.க்களுடன் கொரோனா பாதிப்பு பற்றி நாளை ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார சூழல் பற்றி நாளை ஆலோசிக்கிறார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார சூழல் தேக்கமடைந்து காணப்படுகிறது.
இதேபோன்று, கொரோனாவால் நாட்டில் இதுவரை 7.93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,604 ஆக உயர்வடைந்து உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 63% ஆக உள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சூழல் ஆகியவற்றால் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை ஆகியவற்றை பற்றி எதிர்க்கட்சியான காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வீடியோ கான்பரன்சிங் வழியே நாளை கூட்டமொன்றை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுடன் நடப்பு சூழ்நிலை பற்றி சோனியா காந்தி ஆலோசனை மேற்கொள்கிறார்.