சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஜூலை 24ந்தேதி வரை தடை; ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜூலை 24ந்தேதி வரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

Update: 2020-07-21 10:10 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிகார மோதலில் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.

மேலும் அவருக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், தங்களை தகுதி நீக்கம் செய்ய கூடாது என கோரி சச்சின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.  இதில், சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது வருகிற ஜூலை 24ந்தேதி வரை சபாநாயகர் சி.பி. ஜோஷி எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற வெள்ளி கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இதேபோன்று ராஜஸ்தான் சட்டமன்றமும் வருகிற ஜூலை 24ந்தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் கேட்டு கொண்டது.

மேலும் செய்திகள்