ஜார்க்கண்டில் முககவசம் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம்

ஜார்க்கண்டில் முககவசம் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2020-07-23 16:31 GMT
ராஞ்சி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.  ஜார்க்கண்டில் 6,485 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  64 பேர் பலியாகி உள்ளனர்.  3,397 பேர் குணமடைந்தும், 3,024 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

ஜார்க்கண்ட் சட்டசபையில் உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை செயலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பற்றிய முடிவுகள் வெளிவந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை செயலகம் சீல் வைக்கப்பட்டு, வருகிற 27ந்தேதி வரை மூடப்படுகிறது.  இதேபோன்று, சட்டசபை குழு கூட்டங்கள் அனைத்தும் வருகிற 31ந்தேதி வரை தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன.

இதனிடையே, ஜார்க்கண்ட் அமைச்சரவை கூட்டத்தில், ஜார்க்கண்ட் தொற்று வியாதி அவசர சட்டத்திற்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.  இதன்படி, பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசங்களை அணியாவிட்டாலும், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.  இதேபோன்று 2 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்