மோடி அரசிடம் திட்டமும் இல்லை: திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை - ப.சிதம்பரம் விமர்சனம்

மோடி அரசிடம் திட்டமும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2020-07-30 15:09 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில்,

2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது: (1) தொலைதொடர்பு (2) விமானப் போக்குவரத்து

தொலை தொடர்பு துறையில் ஒரு பெரிய நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களும் ஏர் இந்தியாவைப் போல் பயணிகளும் இல்லாமல் பணமும் இல்லாமல் முடங்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும்  இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது.

மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து  விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன்.

மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை.

என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்