கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து எர்ணாகுளம் பொருளாதார குற்றங்களுக்கான கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-08-13 10:59 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அமலாக்கத்துறையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதற்கிடையில் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த நிலையில் இந்த மனு இன்று எர்ணாகுளம் பொருளாதார குற்றங்களுக்கான கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிர்ரர். இதனால் மீண்டும் ஸ்வப்னா ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

ஏற்கனவே என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்