நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் மக்களே - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா பரவலுக்கு மக்களே காரணம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-08-23 09:44 GMT
புதுச்சேரி,

நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் மக்கள் தான் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்கள் சட்டத்தை பின்பற்றவில்லை.ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில் ஒரு மைல் தூரத்திற்கு மக்கள் முண்டியடித்து  கொண்டு  நின்று மதுபாட்டிலை வாங்கி சென்றனர். அரசு கோரிக்கை விடுத்த பின்னரும் சமூக இடைவெளி இன்றி விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செல்வதுமாக உள்ளனர் என்று மக்களின்  நடவடிக்கைகளை  கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் விநாயகர் சதுர்த்திக்கு பொருள்களை வாங்குவதற்காக பல இடங்களில் கூட்டமாக மக்கள் அலைமோதினார்கள். வெளியே வராமல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் மதிக்கவில்லை. அனைவரும் வெளியே கடைக்கு சென்று கும்பலாக கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள்.இதனால் நோய் தொற்று அதிகமாகும் என சுட்டிகாட்டினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாகவும், வரியே கட்டாமல் பலர் அரசு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்