நாட்டில் 1.93 சதவீதத்தினரே ஐ.சி.யூ.வில் உள்ளனர்; மத்திய மந்திரி ஹர்ச வர்தன்
நாட்டில் 1.93 சதவீதத்தினரே ஐ.சி.யூ.வில் உள்ளனர் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கை அமல்படுத்தியதுடன், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.
கொரோனா வைரசின் பாதிப்புகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள உயர் மட்ட அளவிலான மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் 20வது ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் தலைமையேற்று பேசும்பொழுது, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் விகிதம் 1.86 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இது உலக அளவில் மிக குறைவாகும். இதேபோன்று குணமடைந்தோர் விகிதம் 76.64 சதவீதம் ஆக உள்ளது. 0.29 சதவீதம் பேர் வெண்டிலேட்டர் சிகிச்சை பெறுகின்றனர். 1.93 சதவீதத்தினரே ஐ.சி.யூ.வில் உள்ளனர். 2.88 சதவீதம் பேருக்கு பிராண வாயு அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 1,576 ஆய்வகங்கள் உள்ளன. அவற்றின் வழியே நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கு எட்டப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.