காஷ்மீரில் வீரமரணம்; இந்திய ராணுவ அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரியின் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா என்ற இடத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் நாட்டு ராணுவம் இந்திய நிலைகளை நோக்கி முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரியான ராஜ்வீந்தர் சிங் படுகாயமடைந்து உள்ளார். உடனடியாக அவர் அங்கிருந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வீரமரணம் அடைந்து விட்டார்.
இதனை இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரி ராஜ்வீந்தர் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது.