நாட்டில் ஆகஸ்ட் மாதம் ரூ.86,449 கோடி ஜி.எஸ்.டி வசூல் - நிதி அமைச்சகம் தகவல்

நாட்டில் ஆகஸ்ட் மாதம் ரூ.86,449 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-01 16:03 GMT
புதுடெல்லி, 

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 86,449 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 86,449 கோடி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.15,906 கோடியும், மாநில ஜி.எஸ்.டி., ரூ. 21,064 கோடியும்,, ஒருங்கிணைந்த ஜிஎஸ்.டி., ரூ.42,264 கோடியும், கூடுதல் செஸ் வரி ரூ.7,215 கோடியும் அடங்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்