காஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; சி.ஆர்.பி.எப். துணை தளபதி காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2020-09-17 13:03 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பட்டமலூ பகுதியில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அவர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து போலீசாரும் அதிரடி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்கள் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த என்கவுண்ட்டரில் சி.ஆர்.பி.எப். துணை தளபதி ராகுல் மாத்தூர் படுகாயமடைந்து உள்ளார்.  இதேபோன்று காயமடைந்த கவுன்சார் ஜன் என்ற பெண் பின்னர் உயிரிழந்து விட்டார்.  இதனை ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்