மராட்டியத்தில் கட்டிட விபத்து; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

மராட்டியத்தில் கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2020-09-24 02:41 GMT
தானே,

மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் தமன்கர் நாக்கா அருகே நார்போலி பட்டேல் காம்பவுண்டில் உள்ள ஜிலானி என்ற 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு-பகலாக ஈடுபட்டனர்.  நேற்று முன்தினம் வரை 2 நாட்களாக நடந்த மீட்பு பணியில் இடிபாடுகளில் இருந்து 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று 3வது நாளாக மீட்பு பணி நடந்தது. பலத்த மழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  நேற்றைய மீட்பு பணியின் போது 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்திருந்தது.

உயிரிழந்தவர்களில் 18 பேர் இரண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்.  இதுதவிர காயத்துடன் மீட்கப்பட்ட 25 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  தொடர்ந்து இன்றும் மீட்பு பணி நடந்தது.  இதில் 2 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.  இதனால், கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்