நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நியூசிலாந்து பிரதமர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு நாட்டுத்தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் மகத்தான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாங்கள் கடைசியாக சந்தித்ததை நினைவு கூர்ந்து, இந்தியா-நியூசிலாந்து உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.