அசாமில் வாகனம் மோதி காயமடைந்த பத்திரிகையாளர் உயிரிழப்பு; விசாரணைக்கு உத்தரவு

அசாமில் வாகனம் மோதியதில் காயமடைந்த பத்திரிகையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.;

Update:2020-11-13 02:18 IST
அசாமில் வாகனம் மோதி காயமடைந்த பத்திரிகையாளர் உயிரிழப்பு; விசாரணைக்கு உத்தரவு
கவுகாத்தி,

அசாமில் தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் நிருபராக இருந்து வந்தவர் பராக் பூயன்.  இவரது வீடு ககோபாதர் பகுதியில் அமைந்துள்ளது.  அந்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ஊழல் ஆகியவை பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வந்துள்ளார்.  இதனால் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

அவர் தின்சுக்கியா மாவட்ட பத்திரிகையாளர் கூட்டமைப்பின் துணை தலைவராகவும் இருந்துள்ளார்.  அசாமின் முன்னாள் மந்திரி ஜகதீஷ் பூயன் இவரது சகோதரர் ஆவார்.

இந்த நிலையில், அவரது வீட்டருகே வெளியே வந்த பராக் மீது வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.  இந்த சம்பவத்தில் காயமடைந்த பராக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எனினும், அதில் பலனின்றி பராக் உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.  இதில், பராக் மீது மோதிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  அதன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் நடந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்