50% இடஒதுக்கீடு விவகாரம் : தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சில மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இதே விவகாரம் தொடர்பாக கேரளா மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவுடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிப்பதாக கூறி மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் (19 ஆம் தேதி) தள்ளிவைத்தது. மேலும், இந்த மேல் முறையீடு மனு தொடர்பாக விரிவான பதிலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.