விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் கருத்து தேவையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-01 10:23 GMT
புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 தினங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

“இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி வெளிவரும் செய்திகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” என ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா நாட்டின் தலைவர் வெளியிட்டுள்ள தவறான தகவல்கள் குறித்து அறிந்து கொண்டாம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் பற்றிய இது போன்ற கருத்துக்கள் தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக நியாமான உரையாடல்கள் திரித்து கூறப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்