கேரளாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை விதித்தது மத்திய பிரதேசம்
பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலால் கேரளாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை மத்திய பிரதேசம் தடை விதித்துள்ளது.
போபால்,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இறந்துபோகும் பறவைகளின் மாதிரிகளை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் தேசிய அளவில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில், கேரளத்திலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில்,
மத்தியப் பிரதேசத்திலுள்ள கோழி வளர்ப்புப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. பறவைக் காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளத்திலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது” என்றார்.