உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைவு: காரணங்களை விளக்கிய மத்திய மந்திரி

உலக நாடுகளுடனான ஒப்பீட்டளவில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் குறைவுக்கான காரணங்களை மத்திய வெளியுறவு மந்திரி விளக்கியுள்ளார்.

Update: 2021-02-06 14:27 GMT
புதுடெல்லி,

ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா நகரில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, இந்த நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் அதனை எதிர்கொள்ள, வேறு பல நாடுகளை போல் இந்தியாவும் முழு அளவில் தயாராகவில்லை.

நம்மிடம் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளன.  ஆனால், கொரோனாவுக்கான சிகிச்சை பற்றிய எண்ணம் ஒருவரிடமும் இல்லை.  ஒருவருக்கும் அதற்கான மையங்களை அர்ப்பணிக்கவும் இல்லை.

ஒரு சிலரே முக கவசங்களை தயாரித்தனர்.  ஒருவரிடமும் பி.பி.இ. (தனிநபர் பாதுகாப்பு சாதனம்)
சாதனங்கள் இல்லை.  ஆனால், முக கவசங்கள் மற்றும் பி.பி.இ. சாதனங்களை அதிக அளவில் தயாரிக்கும் உலக நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம். 

நம்மிடம் வென்டிலேட்டர் தயாரிக்க 25 நிறுவனங்கள் உள்ளன.  நமக்காகவும், உலகத்திற்காகவும் அவற்றை நாம் உற்பத்தி செய்கிறோம்.  கொரோனா வைரசை எதிர்கொள்ள 16 ஆயிரம் மையங்களை ஏற்படுத்தி உள்ளோம்.

ஊரடங்கை முன்பே அமல்படுத்தியதனால், முன்னெப்பொழுதும் இல்லாத சுகாதார விசயங்களுக்கு தயாராவதற்கான நேரம் கிடைத்தது.  இதன் விளைவு, உலக நாடுகளுடனான ஒப்பீட்டளவில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைந்து உள்ளது.  உலகில் அதிக குணமடைந்தோர் விகிதமும் நம்மிடம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்