அரசு குறித்து மீனவப்பெண்கள் புகார் ராகுல்காந்தியிடம் திரித்து கூறிய நாராயணசாமி

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ கிராம பெண்களுடன் ராகுல்காந்தி நேற்று கலந்துரையாடினார்.

Update: 2021-02-18 02:04 GMT
புதுவை,

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ கிராம பெண்களுடன் ராகுல்காந்தி நேற்று கலந்துரையாடினார். அப்போது, மூதாட்டி ஒருவர் நிவர் புயலின் போது பெய்த பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். யாருமே எங்கள் கிராமத்துக்கு வந்து பார்க்கவில்லை. 

இதோ இவர் கூட (நாராயணசாமியை கையை காட்டி) வந்து பார்க்கவில்லை. அவரிடமே கேட்டுப்பாருங்கள். எங்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று ஆவேசமாக கூறினார்.

அதை கேட்டதும் ராகுல்காந்தி, நாராயணசாமியின் பக்கம் திரும்பினார். உடனே அவர் அதை சமாளித்துக்கொண்டு நிவர் புயலின்போது நான் இங்கு வந்து பார்த்து விட்டுச் சென்றேன். அதைத்தான் அந்த பெண் கூறுவதாக தன்னைப் பற்றி புகார் கூறியதை மறைத்து ராகுல்காந்தியிடம் நாராயணசாமி ஆங்கிலத்தில் திரித்து கூறினார்.

ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்பதால் அவரிடம் தன்னைப் பற்றிய புகாரை மறைத்து நாராயணசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்