விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதில் வரலாற்று சாதனை: பிரதமர் மோடி

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வரலாற்று சிறப்புமிக்க அளவுக்கு உயர்த்தி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-02-25 04:39 GMT
விவசாய நிதி உதவி திட்டம்
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. இத்திட்டப்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டுக்கு உணவு வழங்க இரவு, பகலாக கடினமாக உழைத்து வரும் விவசாயிகளுக்கு கவுரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கினோம். விவசாயிகளின் ஆர்வமும், விடாமுயற்சியும் பிரமிக்க வைக்கிறது.

வருமானம் இரட்டிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக விவசாயத்தில் புரட்சியை உண்டாக்க எத்தனையோ நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சிறப்பான நீர்ப்பாசன திட்டம், அதிக கடன், பயிர் காப்பீடு, மண் வளத்தில் கவனம், இடைத்தரகர்களை நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வரலாற்று சிறப்புமிக்க அளவுக்கு உயர்த்திய பெருமை, இந்த அரசுக்கு உண்டு. மேலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்