ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை

ஆப்பிரிக்காவின் மிக உயரிய கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி ஆந்திரா சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

Update: 2021-03-02 03:06 GMT
ஆந்திரா, 

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ரித்விகா ஸ்ரீ என்ற 9 வயது சிறுமி ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயரிய மலைச் சிகரமான கிளிமஞ்சாரோவின் மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார். 

தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய இளம் வயதுடையவர்களில் இவர் 2ம் இடத்தில் உள்ளார். மேலும் கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய ஆசிய நாட்டைச் சேர்ந்த இளம்நபர் என்ற சாதனையையும் ரித்விகா ஸ்ரீ படைத்துள்ளார். பள்ளியில் படித்து வரும் ரித்விகா ஸ்ரீ, கடல் மட்டத்தில் இருந்து 5,681 மீட்டர்கள் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தின் கில்மன் சிகரத்தை அடைந்துள்ளார். வழிகாட்டியான தனது தந்தையுடன் சேர்ந்து அவர் மலை ஏற்றம் செய்திருக்கிறார்.

மாணவி ரித்விகாவின் தந்தை கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். தெலுங்கானாவில் உள்ள போங்கிர் என்ற மலை ஏற்றப்பள்ளியில் பயிற்சி பெற்றுள்ளதுடன், லடாக்கில் 2ம் நிலை மலை ஏற்றப் பயிற்சியையும் மாணவி ரித்விகா ஸ்ரீ பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக அனந்தபூரின் மாவட்ட ஆட்சியரும், மேஜிஸ்திரேட்டுமான காந்தம் சந்துருடு தனது டுவிட்டரில், “கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய உலகின் இரண்டாவது இளைய மற்றும் ஆசியாவின் இளைய பெண் என்ற பெருமையை அனந்தபூரின் ரித்விகா ஸ்ரீ பெற்றுள்ளார் அவருக்கு என் வாழ்த்துக்கள். பல இடையூருக்கு மத்தியிலும் நீங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். பிறருக்கு ஊக்கமளித்துக் கொண்டிருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 



மேலும் செய்திகள்