குஜராத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரம் ஆமதாபாத்தில் பஸ் போக்குவரத்துக்கு தடை; சினிமா தியேட்டர்கள் மூடல்

குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவும் சூழலில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து ஆமதாபாத் நகரில் சினிமா தியேட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

Update: 2021-03-19 01:10 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவும் சூழலில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து ஆமதாபாத் நகரில் சினிமா தியேட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், இ்ந்தியாவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி முதல் மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில் மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவும் சூழலில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,122 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 100 நாட்களுக்கு பிறகு எட்டியுள்ளது.

இதனையடுத்து ஆமதாபாத் நகரில் சினிமா தியேட்டர், ஜிம், பூங்காக்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள், சந்தைகள் போன்றவை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வரும் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்