பஞ்சாப்: சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
பஞ்சாப்பில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கார் மற்றும் சைக்கிளில் சென்றவர்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மொஹாலியில் உள்ள ராதா சௌமி சட்ஷங் சவுக் சாலையில் நேற்று வழக்கமான பரபரப்புடன் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த சொகுசு கார் சாலையின் மறுபுறும் வந்துகொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அதன்பின்னும் தொடர்ந்து வேகமாக சென்ற சொகுசு கார் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீதும் மோதி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதையில் உள்ள இரும்பு கம்பி மீது மோதி நின்றது.
இந்த பயங்கர விபத்தில் சாலையின் எதிர்புறத்தில் இருந்து வந்துகொண்டிருந்த காரில் இருந்தவர்களில் 2 பேரும், சைக்கிளில் பயணித்த 1 நபரும் என மொத்தம் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். பயமடைந்தவர்களை மீண்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த
விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக சொகுசுகாரை ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தனியார் நிறுவனத்தில் இரவு நேரப்பணியை முடித்துவிட்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.