மும்பையில் ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்; அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு

மும்பையில் வார இறுதி நாட்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-04-10 05:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.  கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று புதிய உச்சம் அடைந்தது. அதன்படி ஒரே நாளில் 376 பேர் பலியானார்கள். இதுநாள் வரையில் இதுவே அதிகப்பட்ச பலி எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி 5 லட்சத்து 21 ஆயிரத்து 317 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல மும்பையில் நேற்று 9,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  35 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 800க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

இதனை முன்னிட்டு மும்பை நகரில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அரசின் இந்த முடிவை அடுத்து மும்பை நகரில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.  இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும்.

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் நீண்ட தொலைவுக்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  இதன்பின்னர் ஒரு சில வாகனங்கள் அந்த வழியே சென்றன.  அவற்றை முறையான சோதனை செய்த பின்னரே செல்வதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

எனினும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்வதற்கும், பல்வேறு தேர்வுகளுக்காக செல்லும் மாணவ மாணவியருக்கும் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்