உரம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் - மத்திய அரசுக்கு, குமாரசாமி வலியுறுத்தல்
உரம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
உரம் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஆட்சி அதிகாரத்திற்கு வந்த சில மணி நேரங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. விவசாயிகள் குறித்து மென்மையாக பேசும் பா.ஜனதா, அவர்களின் முதுகில் குத்துகிறது. உரம் விலை 60 சதவீதம் உயர்ந்துவிட்டது. உரத்துறை மந்திரி சதானந்தகவுடா, உர உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடாது.
பிரதமரிடம் சதானந்தகவுடா பேசி, ரத்து செய்யப்பட்ட உரத்திற்கு மத்திய அரசு வழங்கிய மானியத்தை மீண்டும் வழங்குமாறு எடுத்துக் கூற வேண்டும். உர மானியத்தை மத்திய அரசு 50 சதவீதம் குறைத்துவிட்டது. வெறும் வாய் பேச்சால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளின் வாக்குகளை பெற பா.ஜனதாவினர் எத்தனை நாட்கள் பொய் பேசுவார்கள். உரம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்” என்று குமாரசாமி பதிவிட்டுள்ளார்.