கொரோனா பரவல் அதிகரிப்பு: தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-30 09:54 GMT
ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 646 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 77 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 618 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,261 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தெலுங்கானாவில் கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இரவு நேர ஊடரங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் மே 8-ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் இன்று மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்