கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் என்ன?

கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்து இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-05-04 04:17 GMT
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்து இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், “ அத்தியாவசிய சேவை தவிர அனைத்து நடவடிக்கைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மாநில மத்திய அரசு நிறுவனங்கள் அதன் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைப்பிரிவுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அலுவலகத்தில் பணிபுரிவார்கள். அவசியமான ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசிய சேவை தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் பணியாற்றலாம். ஆக்சிஜன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் அடையாள ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். தொலைதொடர்பு சேவை, உள்கட்டமைப்பு சேவை, இணைய சேவை வழங்குபவர்கள், பெட்ரோல், எல்.பி.ஜி வழங்குவோர் அத்தியாவசிய சேவைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நோயாளிகள் மற்றும் அவர்களது தோழர்கள் அவசர காலத்தில் பயணம் செய்யலாம். பணியாளர்கள், முதலாளிகள் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். கடைகள் உணவகங்கள் இரவு 9 மணிக்கு மூட வேண்டும்.  திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிசடங்கில் அதிகபட்சமாக 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனைத்து வகையான திரைப்பட மற்றும் சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். 

மேலும் செய்திகள்