லஞ்ச புகாரில் கைதான இந்திய உணவு கழக அதிகாரிகள் வீடுகளில் ரூ.3 கோடி, 1 கிலோ நகைகள் சிக்கின; பணம் எண்ணும் எந்திரமும் இருந்ததால் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில் இந்திய உணவு கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு கட்டணம் வழங்குவதற்கு ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டதாக பயனாளி ஒருவர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

Update: 2021-05-29 18:15 GMT

இதைத்தொடர்ந்து அந்த அதிகாரிகளை கையும் களவுமாக பிடிப்பதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மண்டல மேலாளர், மேலாளர்கள் உள்பட 4 பேர் சிக்கிக்கொண்டனர்.அவர்களை கைது செய்த அதிகாரிகள் போபால் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சி.பி.ஐ. காவலில் சிறையில் அடைத்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடந்தது. இதில் ரூ.3.01 கோடி, 1 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும் ஒருவரின் வீட்டில் பணம் எண்ணும் எந்திரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் லஞ்சம் பெற்றது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் செய்திகள்