உத்தரபிரதேசத்தில் கங்கையில் மிதந்து வந்த மேலும் 6 உடல்கள் மீட்பு

உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டன.

Update: 2021-06-01 01:26 GMT
பதேப்பூர், 

கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை கங்கை நதியில் தூக்கி வீசும் கொடூர சம்பவங்கள் வட மாநிலங்களில் நடந்து வருகின்றன. இவ்வாறு வீசப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட உடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 6 உடல்கள் கங்கையில் மிதந்து வந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து பதேபூர் சதர் தாலுகா சப்-கலெக்டர் பிரமோத் ஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த அவர் அந்த உடல்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அவற்றை மீட்டபின் அந்த உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது.

இந்த உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் அழுகி சேதமடைந்திருந்தன. எனவே நீண்ட தூரத்தில் இருந்து இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனவும், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பதேபூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் இறந்த ஒருவரின் உடலை உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் ஓடும் ரப்தி ஆற்றில் 2 பேர் வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சித்தார்த்நகர் மாவட்டத்தை சேர்ந்த பிரேம்நாத் மிஸ்ரா என்பவரின் உடல்தான் ஆற்றில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் பிரேம்நாத்தின் உடலை ஆற்றில் வீசியவர்களை தேடியும் வந்தனர். அதன்படி இந்த விவகாரத்தில் 2 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்