காங்கிரசைத் தவிர்த்து பா.ஜனதாவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க முடியாது - சரத்பவார்

காங்கிரஸ் கட்சி இணைந்தால் மட்டுமே, பா.ஜனதாவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முடியும், என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-26 05:06 GMT
புதுடெல்லி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சரத்பவார் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை அணி திரட்டி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் சமீபத்தில் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், சரத்பவார் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதில், முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா (திரிணாமுல் காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), கான்ஷ்யாம் திவாரி (சமாஜ்வாடி), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), பினாய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), நிலோத்பல் பாசு (மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவாரும் பங்கேற்றார்.

காங்கிரசில் இருந்து விலகிய சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகிய பவன் வர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா, கவிஞர் ஜாவீத் அக்தர், கே.சி.சிங் ஆகிய பிரபலங்களும் பங்கேற்றனர்.

பா.ஜனதாவுக்கு  எதிராக 3-வது அணி அமைப்பது பற்றி இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து நிருபர்களிடம் பேசிய சரத் பவார்கூறியதாவது:-

தற்போது, விவசாயிகள் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். போராட்டம் அரசியலற்றது, இருப்பினும், இது விவசாயத்துடன் தொடர்புடையது என்று நாங்கள் நினைத்தோம், எந்த வகையில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியும் ... ஆலோசனை கூட்டத்தின்  நோக்கம் ஒன்றாக இணைந்து  எவ்வாறு உதவ முடியும் என்பதை விவாதிப்பதே ஆகும் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்பி, மத்திய அரசுக்கு  பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ முடியும். 

ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வந்து விவசாய துறை தொடர்பான பிரச்சினைகளை மத்தியரசின் முன் வைப்பதுதான் யோசனை.

காங்கிரசைத் தவிர்த்து பா. ஜனதாவுக்கு எதிரானா  வலுவான கூட்டணியை அமைக்க முடியாது.  காங்கிரஸ் கட்சி இணைந்தால் மட்டுமே, பா.ஜனதாவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முடியும். இது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்