கொரோனா தடுப்பூசி டோஸ் போடும் பணியில் வேகம்; பிரதமர் மோடி திருப்தி
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி திருப்தி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த 21ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் நாட்டில் கொரோனா சூழல் ஆகியவை பற்றி உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில், கொரோனா பரிசோதனைகள் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் தொற்றை கண்டறிவதில் பரிசோதனையே முக்கிய ஆயுதமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 6 நாட்களில் 3.77 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இதற்கு பிரதமர் மோடி திருப்தி தெரிவித்து உள்ளார். இதனை முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.