வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தல்

வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களிடம் பணியாற்றுவோரை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-26 17:55 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஆர்.வி.ரவீந்திரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள, ‘சட்டத்திலும், நீதிமுறையிலும் உள்ள முரண்பாடுகள்’ என்ற புத்தகத்தை, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று காணொலி காட்சி மூலமாக வெளியிட்டார். 

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய என்.வி.ரமணா, இணைய பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகளை களையவும், கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிதியுதவியை எதிர்நோக்கி இருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வழக்கறிஞர்களையும், அவர்களிடம் பணியாற்றுபவர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்