அரசு பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இல்லை - ஆந்திர அரசு அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.;

Update:2021-06-28 11:52 IST
அமராவதி,

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தனது தேர்தல் வாக்குறுதியில், தான் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 2 லட்சம் அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி வழங்காததால், எதிர்க்கட்சியினர் உட்பட பட்டதாரிகள், பெற்றோர் என பலத்தரப்பினர் ஜெகன்மோகன் ரெட்டி அரசை விமர்சிக்க தொடங்கினர். இதனையடுத்து உடனடியாக 10,200 அரசுப் பணியிடங்களை நிரப்பபடும் என அதற்கான அட்டவணையையும் முதல்-மந்திரி வெளியிட்டார்.

இந்நிலையில், குரூப் 1 வேலை முதற்கொண்டு அனைத்து அரசு பணிகளுக்கும் எழுத்து தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் புதிய அரசாணையை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 

ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்