அதிகரித்த ஜி.எஸ்.டி. வசூலை வழக்கமான வசூலாக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. வரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2021-07-01 19:58 GMT
இந்தியா போன்ற பெரிய, பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில் ஜி.எஸ்.டி. போன்ற சீா்திருத்தங்களை அமல்படுத்துவது மிகவும் சவாலானது. இந்த வரியை அமலாக்குவதில் கொரோனா 2 அலைகள் முட்டுக்கட்டைகளாக இருந்தன. இந்த சவால்களை கடந்தது திருப்தி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஏறத்தாழ 2 மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 66 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 1 கோடியே 28 லட்சமாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க ஜி.எஸ்.டி. உதவியாக இருந்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த 8 மாதங்களாக மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்துக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. அதிலும், கடந்த ஏப்ரல் மாத வசூல் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் இந்த ஜி.எஸ்.டி. வசூல், இனிமேல் வழக்கமான வசூலாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்