மத்திய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவு

மத்திய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-07-12 01:11 GMT
கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணி
மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மகுவா ஜாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலையில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.அப்போது தொட்டியில் கூரைக்கான ஸ்லாப் போடுவதற்கு பயன்படுத்தப்படும் ஷட்டரிங் தகடுகளை அகற்றுவதற்காக ஒருவர் தொட்டியில் இறங்கினார்.அப்போது வீட்டில் உள்ள தொட்டிக்குள் மின்விளக்கு போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் இணைப்பு அந்த தகட்டில் பாய்ந்து கொண்டிருந்தது.

காப்பாற்ற இறங்கினர்
இது தெரியாமல் அந்த தகடுகளை அகற்றியதால் அந்த நபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறிய அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் பின் ஒருவராக வீட்டில் இருந்த மேலும் 5 பேர் தொடடிக்குள் இறங்கினர். ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து அனைவரும் தொட்டிக்குள்ளேயே சரிந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

6 பேரும் சாவு
ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் 6 பேரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் 20 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து பிஜாவர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சத்தார்பூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்