கொரோனா அச்சுறுத்தல்: மணிப்பூரில் 10 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மணிப்பூரில் 10 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரமறுக்கிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தான் வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மலைவாசஸ்தலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 1,128- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,688- ஆக உயர்ந்துள்ளது.