டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Update: 2021-07-27 11:43 GMT
புதுடெல்லி, 

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். 

இந்த சந்திப்பில் பிரதமர் மோடியுடன் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தின் நிதி நெருக்கடி சூழலை போக்கும் வண்ணம், மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மம்தா பானர்ஜி முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சந்திப்பை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளார். மேலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை காலை மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்