ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-08-29 07:41 GMT



ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதில் குணமடைந்தபோதிலும், அவருக்கு அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு வந்தன.  கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனையடுத்து, தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில், இதயத்தில் ஒரு ரத்தக்குழாயில் 90 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அடைப்பை நீக்க அசோக் கெலாட்டுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக மருத்துவ கல்லூரி முதல்வர் சுதிர் பண்டாரி கூறினார்.  இரண்டு, மூன்று நாட்கள் முழுஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.  தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவதாகவும் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அசோக் கெலாட் பூரண குணமடைந்த நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அனுமதி அளித்தனர்.  இதன்படி அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

மேலும் செய்திகள்